தைத்திங்கள் தமிழ்ப்புத்தாண்டு கவிதை

தைத்திங்கள் தலைநாள்
தமிழுழவர் ஒளிநாள்
தமிழ்மக்கள் பெருநாள்
தமிழ்ப்புத்தாண்டுத் திருநாள்

தென்திசை ஓய்ந்த கதிரவன்
வெற்றித் திலகம்போல்
வடதிசை நகரும் நன்னாள்

நெல்லுக்கும் உழவர்க்கும்
மடிதரும் நிலம்
உயிர்தரும் நீர்
மூச்சுதரும் காற்று
ஒளிதரும் சூரியன்
மழைதரும் ஆகாயம் என்ற
ஐம்பூதங்களுக்கும்
நன்றியோடு விழா எடுக்கும்
பொன்னாள்

வரப்புகளில் விளையாடி
வயலுக்குள் வாழ்ந்து
வளர்ந்த நெற்கதிர்களை
வெண்மணி அரிசியாக்கி
புத்தம்புதுப் பானையில்
பாலும் சர்க்கரையும்
பாகும் பருப்புமிட்டுப் பொங்கி
மஞ்சளும் இஞ்சியும்
கரும்பும் கற்கண்டும் கூட்டி
நிலத்தை முத்தமிட்டுச்
சூரியனை வாழ்த்தி
உழவர்தம் உயிர் நெகிழும்
பொங்கல்நாள்

தைத் திங்கள்
தமிழ்ப் புத்தாண்டின்
தித்திப்பு வாழ்த்துக்கள்!
அன்புடன் புகாரி

No comments:

Post a Comment

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்